Tuesday, June 02, 2020

நட்சத்திர அர்ச்சனை

 20 ஆண்டுகளுக்கு முன்பு இதே நாள். கோவை மருத்துவக் கல்லூரி வளாகத்தில் அமையப்பெற்ற அருள்மிகு வித்யா கணபதி திருக்கோயிலில் #இளையராஜா என்ற பெயருக்கு அர்ச்சனை செய்யச் சொல்லிக் கேட்கிறோம் நானும் சில இசையுணர்ந்த நண்பர்களும். "நட்சத்திரம்?" என்று கேட்டார் அர்ச்சகர். "அவரே நட்சத்திரம் தான்" என்று நினைத்தபடியே "தெரியாது" என்றோம். ஜென்ம நட்சத்திரத்துக்கு அர்ச்சனை செய்து விபூதி கொடுத்தார். எனக்குத் தெரிந்து நேரடியாக என் குடும்பத்துடன் சம்பந்தப்படாத ஒருவருக்கு நான் அர்ச்சனை செய்யச் சொல்லிக் கேட்டது அதுவே முதல் முறை. அல்லது, இவரும் எங்கள் குடும்ப உறுப்பினர் தான் என்று எனக்கு நானே பறைசாற்றி மகிழ ஆசைப்பட்டதன் விளைவே அந்நிகழ்வா என்று தெரியவில்லை.

இருபது ஆண்டுகளில் கடவுள், கோவில், அர்ச்சனை, வேண்டுதல் போன்றவற்றின் மீதுள்ள நம்பிக்கையும் ஈடுபாடும் ஏற இறங்க இருந்தாலும் இவர் நன்றாகப் பலகாலம் வாழ்ந்து இசையால் இன்னும் பல தலைமுறைகளை அரவணைக்க வேண்டுமென்ற உளமார்ந்த அவா மட்டும் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. இருக்கும்!

இனிய பிறந்தநாள் வணக்கங்கள், எங்கள் இசை ஆதவனே! 

No comments: