Saturday, February 15, 2025

உரிமைப் போராட்டக்காரர்கள் எல்லோருமே சுயமரியாதைக்காரர்களா?

தனது உரிமைகள் தனக்கு மேலே வைக்கப்பட்டோர்களால் பறிக்கப்படும் போது, உயிரைக் கொடுத்தாவது அவற்றை மீட்கப் போராடுபவனை உரிமைப் போராட்டக்காரன் எனலாம். ஆனால், தன்னைவிடக் கீழே வைக்கப்பட்டோரின் உரிமைகளை அவர்கள் அறியாதபோதும், அவற்றை அவர்களுக்குப் புரியவைத்து, அவர்களும் அந்த உரிமைகளை அடைய வழிவகை செய்பவனே சுயமரியாதைக்காரன்.

இருவருக்கும் ஒரு முக்கியமான வேறுபாடு உண்டு: பல நேரங்களில், தனது உரிமைகளுக்காக மட்டுமே போராடும் உரிமைப் போராட்டக்காரன், தனக்கு மேலே வைக்கப்பட்டோர்களுக்குச் சமமாக இருக்க வேண்டுமென்பதை விட, தானும் சிலருக்கு மேலாக இருக்க வேண்டியவன் என்பதையே நிறுவ விரும்புகிறான். ஆனால், சுயமரியாதைக்காரனோ, தன்னைவிடக் கீழே வைக்கப்பட்டவர்களும் தனக்குச் சமமானவர்களே என்பதை நன்கு அறிந்து, அவர்களும் அதனை உணர்ந்து, அவர்களது உரிமைகளை நிலைநாட்ட வழிவகை செய்து, ஏற்றத்தாழ்வு அற்ற ஒரு சமத்துவ சமுதாயத்தை உருவாக்குவதில் தன் பங்கை நேர்மையாக ஆற்ற முயல்கிறான்.

எனவே, உரிமைப் போராட்டக்காரர்கள் எல்லோருமே சுயமரியாதைக்காரர்கள் அல்லர் என்பதை உணர்வது நம் மதிக்கு நன்மை தரும்.

புரிய வேண்டியவர்களுக்குப் புரிவதற்காக எழுதுகிறேன்!

Saturday, January 25, 2025

நம்பினார் கெடுவதில்லை!

ஒருவரை நம்பியதனால் நான் அடைந்த ஏமாற்றத்தைப் பாடுபட்டு ஏற்றுக்கொண்டு அதனைக் கடந்து செல்லும் ஒவ்வொரு முறையும் அடுத்ததாக ஒருவரை நம்பும் வல்லமையை நான் கொஞ்சமேனும் இழக்கத் தான் செய்கிறேன். எனினும், "தான் நம்பப்படவில்லையே" என்ற ஆதங்கம் நாணயமுள்ள எந்த ஒருவருக்கும் என்னால் ஏற்பட்டுவிடக் கூடாது என்ற அக்கறையால் நான் மீண்டும் முன்முடிவற்று நம்பத் தொடங்குகிறேன் - நான் நம்ப விரும்புபவர்களை; ஏமாறுவதற்கு முன்னரே விழித்துக் கொள்ளும் பாடத்தைக் கற்றுத் தெளிந்து விட்டேன் என்ற என் நம்பிக்கையை மட்டும் துணையாகக் கொண்டு!

- ஜ. விஜய் வெங்கட்ராமன் 
(25 ஜனவரி 2025)

Sunday, December 22, 2024

பிச்சை

பொருள் வேண்டித் தன்னை நோக்கி நடந்து வரும் பிச்சைக்காரரிடம் கண்களாலேயே அருள் பிச்சை கேட்டார் தன் சட்டைப்பையில் சில்லறை இல்லை என்பதை முன்பே அறிந்திருந்த செல்வந்தர்!

Sunday, August 04, 2024

நண்பன் கண்ணதாசனுக்குப் பிறந்தநாள் வாழ்த்து!

மருத்துவம் நம்மைச் சந்திக்க வைத்தாலும் 
இசையே நம்மை இணைத்து வைத்தது! 
உன்னைப்போலத் தான் நானென்று நீயும் 
என்னைப்போலத் தான் நீயென்று நானும் 
உணர்ந்த அத்தருணத்தில் தொடங்கிய நட்பால் 
எவ்வளவு இசையை பருகியிருப்போம் ஒன்றாக!
எத்தனை மேடைகளில் இசைத்திருப்போம் நன்றாக!
இசைஞானியின் பெருமையினை இணைந்து நாம்உணர 
இசைந்த நம்மனங்கள் வளர்த்த அன்பினால் 
உன்வாழ்வில் நானும் என்வாழ்வில் நீயும் 
இரண்டரக் கலந்திடவே ஒன்றானது நம்வாழ்வு! 
உன்னைநான் வாழ்த்துவதும் என்னைநீ வாழ்த்துவதும் 
வார்த்தைகளாலா? அல்ல! ஒன்றான மனத்தால்!

"ஹே ராஜா! ஒன்றானோம் இன்று! 
இனி நாம் தானே ரெண்டல்ல ஒன்று!"

என்று நமக்குப் பொருத்தமாகப் 
பாடல்தந்து 
நட்பே வாழ்த்திய பெருமையுடன் சொல்வேன்:

Happy Birthday, Partner! Wishing you many more happy returns of the day!

Friday, July 12, 2024

அன்பு பாரமா?

சுமக்க முடியாத பாரமாக மாறிவிடுவதில்
தன்னிகரற்றுத் திகழ்கிறது "அன்பு"!

சில நேரங்களில்
அது மற்றவர்கள் நம் மீது வைத்திருக்கும் அன்பாக இருந்தாலும்,
பல நேரங்களில்
அது நாம் மற்றவர்கள் மீது வைத்திருக்கும்
அன்பாகவே இருக்கிறது!

Saturday, May 04, 2024

இசையால் மலர்ந்ததே மொழி!

நவம்பர் 6, 1980 அன்று திரைக்கு வந்த இரண்டு படங்கள்:

1) நிழல்கள் - வைரமுத்து எழுதிய முதல் பாடல் இடம்பெற்ற திரைப்படம்.

2) மூடுபனி - இளையராஜா இசையமைத்த 100வது திரைப்படம். 

1976ல் அறிமுகமாகி 4 ஆண்டுகளுக்குள் 100 படங்களுக்கு இசையமைத்து அவற்றில் குறைந்தபட்சம் 100 சூப்பர்ஹிட் பாடல்களைத் தந்து உலகிலேயே யாரும் என்றும் நினைத்துக் கூடப் பார்க்க முடியாத சாதனையை அன்றே செய்தவர் இளையராஜா என்பது வரலாற்று உண்மை.

வைரமுத்துவால் இளையராஜா ஆதாயம் அடைந்தார் என்போரின் பேச்சைக் கேட்பதற்கு முன்பு இளைய தலைமுறையினர் தெரிந்து கொள்ள வேண்டிய செய்தி இது!

Monday, February 19, 2024

மகிழ்ச்சியும் மலர்ச்சியும்

"அவள் முகம் மலர
அவன் மனம் மகிழும்!
அவன் மனம் மகிழ
அவள் முகம் மலரும்:

இருமுகமும் ஒருமுகமென
இல்வாழ்வில் ஒன்றானதால்!"

இன்று எங்களது திருமண நாளுக்காக வாழ்த்திக் கொண்டிருக்கும் நலம்விரும்பிகளுக்கு நன்றிகளுடன் அடுத்த தலைமுறை இணைகளுக்கு எங்களது அனுபவச் செய்தி இது 😊

- Vijay Venkatraman Janarthanan & Harrini Kumarakrishnan