Monday, June 02, 2025

எங்கள் இசை ஆதவனே!

இன்று இசைஞானி இளையராஜாவின் 82ம் பிறந்தநாள்!

அவரைப் பற்றி எழுத எத்தனையோ இருக்கின்றன! பணிச்சுமை காரணமாகப் புதிதாக எதையும் சிந்திக்க இன்றைய நாள் முழுவதும் எனக்கு வாய்ப்பு அமையவில்லை. ஆனால், நான் அதிகம் கேட்டிராத (கீழே குறிப்பிட்டுள்ள) அவரது இரண்டு பாடல்களைக் கவனித்துக் கேட்கும் வாய்ப்பு எதிர்பாராத வகையில் இன்று கிடைத்தது:

1) 1992ம் ஆண்டு வெளியான கில்லர் என்ற தெலுங்குப் படத்தில் இடம்பெற்ற 'ரம்பலகே ரன்ஸுமொஹுன்னி' என்ற துள்ளலிசைப் பாடல்.

2) இன்னும் மூன்று நாட்களில் வெளியாக இருக்கும் தமிழ்த் திரைப்படமான 'பேரன்பும் பெருங்கோபமும்' படத்தில் இடம்பெற்றுள்ள 'ஒரு மனைவியாய்' என்ற மெல்லிசைப் பாடல்.

மேற்கூறிய இரண்டு பாடல்களும் எல்லா விதங்களிலும் வேறுபட்டவை. ஆனால், அவற்றில் உள்ள முத்திரை ஒன்று - எவராலும் முழுக்க நகலெடுக்க முடியாத ராஜமுத்திரை! என்னென்ன உணர்ச்சிகள் உயிர்களுக்கு ஏற்பட வாய்ப்பு இருக்கிறதோ அத்தனைக்கும் அவர் பாடல் செய்திருக்கிறார் எனினும், அதனினும் சிறந்ததாக நான் பார்ப்பது, அவற்றில் உள்ள அவரது தனித்துவத்தையே! 

கடந்த 30 ஆண்டுகளாக ஒரு ஆத்மார்த்தமான ரசிகனாக அவரது படைப்புகளைத் தேடித் தேடிக் கேட்கக்கூடிய எனக்கு, பழைய பாடலோ புதிய பாடலோ, அவரது எந்த ஒரு பாடலையும் முதன்முறையாகக் கேட்கும் போது ஏற்படும் வியப்பு குறைந்ததே இல்லை என்பது இப்போதெல்லாம் எனக்கு வியப்பாக இல்லை. எப்போதும் இன்ப இசை ஆச்சர்யங்களைத் தனக்குள் வைத்திருந்து நாம் விரும்பும் போதெல்லாம் நமக்குத் தரும் நமக்கே நமக்கான ஒரு அட்சய பாத்திரத்தை எவ்வாறு வார்த்தைகளால் புகழ்ந்து தீர்த்திட முடியும்?

இன்னும் நூறாண்டு காலம் வாழ்ந்து இன்னும் பல்லாயிரம் இசைக்காவியங்கள் படையுங்கள், எங்கள் இசை ஆதவனே!


எங்கள் இசை ஆதவனே!



Friday, April 18, 2025

அறமெனும் உலக நியதி

அறம் செய்ய விரும்புவோருக்கு மட்டுமே அறம் பிறழ்வதில் உள்ள பாவம் புரியும். 

பிறழ்வே நியதியாகிப் போன உலகிலோ 'அறமற்று இருப்பதில் என்ன பெரிய தவறு இருக்கிறது?' என்ற கேள்வியே எழும்!

Saturday, February 15, 2025

உரிமைப் போராட்டக்காரர்கள் எல்லோருமே சுயமரியாதைக்காரர்களா?

தனது உரிமைகள் தனக்கு மேலே வைக்கப்பட்டோர்களால் பறிக்கப்படும் போது, உயிரைக் கொடுத்தாவது அவற்றை மீட்கப் போராடுபவனை உரிமைப் போராட்டக்காரன் எனலாம். ஆனால், தன்னைவிடக் கீழே வைக்கப்பட்டோரின் உரிமைகளை அவர்கள் அறியாதபோதும், அவற்றை அவர்களுக்குப் புரியவைத்து, அவர்களும் அந்த உரிமைகளை அடைய வழிவகை செய்பவனே சுயமரியாதைக்காரன்.

இருவருக்கும் ஒரு முக்கியமான வேறுபாடு உண்டு: பல நேரங்களில், தனது உரிமைகளுக்காக மட்டுமே போராடும் உரிமைப் போராட்டக்காரன், தனக்கு மேலே வைக்கப்பட்டோர்களுக்குச் சமமாக இருக்க வேண்டுமென்பதை விட, தானும் சிலருக்கு மேலாக இருக்க வேண்டியவன் என்பதையே நிறுவ விரும்புகிறான். ஆனால், சுயமரியாதைக்காரனோ, தன்னைவிடக் கீழே வைக்கப்பட்டவர்களும் தனக்குச் சமமானவர்களே என்பதை நன்கு அறிந்து, அவர்களும் அதனை உணர்ந்து, அவர்களது உரிமைகளை நிலைநாட்ட வழிவகை செய்து, ஏற்றத்தாழ்வு அற்ற ஒரு சமத்துவ சமுதாயத்தை உருவாக்குவதில் தன் பங்கை நேர்மையாக ஆற்ற முயல்கிறான்.

எனவே, உரிமைப் போராட்டக்காரர்கள் எல்லோருமே சுயமரியாதைக்காரர்கள் அல்லர் என்பதை உணர்வது நம் மதிக்கு நன்மை தரும்.

புரிய வேண்டியவர்களுக்குப் புரிவதற்காக எழுதுகிறேன்!

Saturday, January 25, 2025

நம்பினார் கெடுவதில்லை!

ஒருவரை நம்பியதனால் நான் அடைந்த ஏமாற்றத்தைப் பாடுபட்டு ஏற்றுக்கொண்டு அதனைக் கடந்து செல்லும் ஒவ்வொரு முறையும் அடுத்ததாக ஒருவரை நம்பும் வல்லமையை நான் கொஞ்சமேனும் இழக்கத் தான் செய்கிறேன். எனினும், "தான் நம்பப்படவில்லையே" என்ற ஆதங்கம் நாணயமுள்ள எந்த ஒருவருக்கும் என்னால் ஏற்பட்டுவிடக் கூடாது என்ற அக்கறையால் நான் மீண்டும் முன்முடிவற்று நம்பத் தொடங்குகிறேன் - நான் நம்ப விரும்புபவர்களை; ஏமாறுவதற்கு முன்னரே விழித்துக் கொள்ளும் பாடத்தைக் கற்றுத் தெளிந்து விட்டேன் என்ற என் நம்பிக்கையை மட்டும் துணையாகக் கொண்டு!

- ஜ. விஜய் வெங்கட்ராமன் 
(25 ஜனவரி 2025)