Wednesday, July 31, 2013

வாழ்த்து

வாழ்த்தென்றால் என்னவென்று வினவினான் நண்பன் - 
வாழ்கவெனும் சொல்லெல்லாம் வாழ்த்தோ என்றவாறே!
வாழ்த்தத்தயங்கா நானோ புன்னகைத்தபடி மறுத்தேன் - 
வாழ்த்தில் சிக்கலென்ன என்றுஅவன் மனம்வியக்கவே!

​அவர்பால் தன்னகத்தில் தோன்றும் உண்மையன்பைச்  
செல்வமாய் அவருணர உரைப்பதே வாழ்த்தென்றேன்!
அன்பில்லா ஒருவரின் பொய்நகையுடன் வெளிப்படும் 
செல்லாத சொல்லெல்லாம் வாழ்த்தல்லவே யென்றேன்!

Sunday, June 30, 2013

பாடும் பாட்டும்!

பாடுபட்டு உழைத்தும் பாடுபடுத்தா குணத்தைப் 
பழகத்தான் இயலவில்லை - பாடுபடுத்தும் மனத்தால்! 
பாட்டைப் பழகியபின்னோ மனப்பாடு பறந்தது; 
பழகிய இசையாலே பாடுபடுத்தல் மறந்தது! 

Sunday, June 02, 2013

The Common Man's Classical Composer

The common man's one & only original global classical music composer in the truest sense, turns 70 today - only chronologically, of course! He is sure to remain ever youthful through his tunes and will reign as the undisputed king of his fans' minds, true to his name! May the rest of the world be blessed enough to comprehend the beauty of his creativity and enjoy its relevance to LIFE as a whole, as we do 🙂

Wishing many more Happy Returns of the Special Day to Maestro Ilaiyaraaja!

Friday, May 31, 2013

உரைப்பதெலாம் உளறலே!

முன்னைப்போல் இசைத்திடென்று மன்றாடிக் கேட்டிடுவார்; 
முன்னைப்போல் இசைத்தாலோ முந்தையது தானேவென்பார்! 
உன்னைப்போல் இசைதந்தால் வேறுவிதம் வேண்டிடுவார்; 
உன்னைப்போல் இசைக்காவிடில் எவ்விதம் ஏற்கவென்பார்! 

விண்ணைப்போல் விரிந்து வளியைப்போல் நிறைந்து 
மண்ணைப்போல் தாங்கி மகாநதியைப்போல் பரந்து 
பண்ணால்தம் மனத்துயர் தீய்த்திடும் உன்பேரறிவை 
எண்ணும் வழியற்றோர் உரைப்பதெலாம் உளறலே!

Sunday, May 12, 2013

அன்னையர் தினம்

அம்மா!

நீ இருந்திருந்தால் இந்த நாள் எல்லோரையும் போல் எனக்கும் 'அன்னையர் தினம்' ஆக இருந்திருக்கும்.

ஆனால், இவ்வுலகமெனும் சிறு வெளியைக் கடந்த பேராற்றலாய் என்னுடன் இருந்து என்னுள் இருந்து என்னை வழிநடத்தி மனிதனாய் இயங்கவைத்து உன் அருளால் எனக்குப் பெயரும் புகழும் வாழ்வும் வளமும் தரும் என் மதியாய் நீ என்றென்றும் இருப்பதால் இந்நாள் மட்டுமல்ல, எந்நாளும் எனக்கு உன் நாளே - உன்னாலே!

அனைவருக்கும் எனது இதயம் கனிந்த அன்னையர் தின வாழ்த்துகள்!

Wednesday, April 10, 2013

படைப்பாளனின் பேரிலக்கணம்


கெட்டவர்களின் கெட்டவற்றை நயவஞ்சகமெனச் சித்தரித்து  
கெட்டவர்களின் நல்லவற்றை நாயகர்பண்பெனப் போற்றாமல் -
நல்லவர்களின் கெட்டவற்றை வாழ்வியல்பென உணரவைத்து
நல்லவர்களின் நல்லவற்றை மாமனிதமென எடுத்துரைத்தலே -
கெட்டதை வளர்க்கவிரும்பாத கேடிழைக்க விழையாத
நல்லதொரு திரைப்படப் படைப்பாளனின் பேரிலக்கணம்!

Sunday, March 31, 2013

கடவுளே, நீ யார்?

தொழுபவர்க்கு நன்மைநல்கித் தன்னைவணங்காரைக் கைவிட்டுத்
தோன்றியபடி விதிசமைத்துத் தலையெழுத்தென உரைக்கவிட்டுத்
தெய்வமெனப் பேர்பெற்றிடக் கடவுளெனவுனக்குப் பெயரெதற்கு?
தேவையெலாம் அரசியலாற்றலென்று பொல்லாததற்கும் துணிந்து
அடிவருடுபவர்க்கு அள்ளித்தந்து எதிர்ப்போரை அழித்தொழித்து 
ஆட்சியினை ஆட்டிவைக்கும் சர்வாதிகாரக் கொடுங்கோலனே
இறைவனென இயற்றப்பட்டிருப்பதை அறிந்திருந்தால் உணர்ந்திருப்போம்:
ஈரமனமும் ஈகைக்குணமுமே கோவெனப்போற்றுதலுக்கு உகந்ததென்று!