Saturday, December 28, 2013

நன்றியுள்ள நாய்க்குட்டி

இன்னா எண்ணுதலை இழிந்ததென்று உணர்த்தாது 
இந்நாளில் இவையெலாம் இயல்பென உரைக்கும் 
என் கயமையைக் கேட்டுப்பழகியபடியே வளர்ந்திடும் 
என் மனசாட்சியும் நன்றியுள்ளதோர் நாய்க்குட்டியே!

Friday, November 08, 2013

அரிதிலும் அரிது கேள்!

எளிதிலும் எளிது - யாரையும் மன்னிக்கும் மனது இல்லாமலிருப்பது; 
எளிது - தனக்குப் பிடித்தவர்களை மட்டுமே மன்னிக்க நினைப்பது;
எளிதிலும் அரிது - தெரியாமல் மோதிச்சென்ற தெரியாதவரை மன்னிப்பது;

அரிதிலும் எளிது - தவறிழைத்த நண்பர்களையும் மன்னிக்காமல் தண்டிப்பது; 
அரிது - கொடிய பகைவனையும் பெருந்துரோகியையும் மன்னித்து அருள்வது; 
அரிதிலும் அரிது - தன்தவறுகளை ஒப்புக்கொண்டு மன்னிக்க வேண்டுவது!

Thursday, October 31, 2013

தீர்ப்பு

தீர்ந்திடாத இன்னலும் தீர்ந்திட வேண்டித்
தீராததோர் இறையைத் தீர்வுக்கென நாடித்
தீர்க்கமாய் நம்பியும் தீரவில்லை இன்னல் -
தீர்ப்பதுதன் கையிலென்று உணராதோனுக்கு!

Monday, September 30, 2013

மதி

மதியென்று ஒன்றுளதே; அது யாதென்று
புதிதாய் வினவினேன் நண்பனிடம் இவ்வாறு:
"விண்ணின் மதியா? பெறும் வெகுமதியா?
பொன்னின் மதியா? தரும் பெருமதியா?"

தான்காணத் தன்விழி இருக்கப் பிறர்கருத்தையே
கண்ணாய்க் கொண்டு பார்வை வளர்ப்போரிடம்
இல்லாதது எதுவென்று சொல்லென்று கூறியவன்
ஈடிலாப் பொருள் தந்தான் என்மதிக்கு!

Saturday, August 31, 2013

கடவுள் ஏன் காணாமல் போனார்?

கடவுள் ஒரு நாள் என் முன்னே தோன்றினார்!
"என்ன வரம் வேண்டும்?" என்று என்னை வினவினார்! 
கண்ட காட்சியை நம்ப முடியா நான் கேட்டதை 
எண்ணி வியந்த படியே முடியா தென்று மறுத்தார்! 

"வேண்டியதைத் தராமல் வேறு என்ன தருவீர்?" என்றதற்கு
"அருள் தருவேன்; பிறருக்கு அருளும் மனம் தருவேன்;
வேண்டா வெறுப்பை மறந்து மகிழும் இதயம் தருவேன்;
அன்பை நகையாய் உன் அகத்துக்குத் தருவேன்" என்றார்!

மெல்லச் சிரித்த நானோ கடவுளைப் பார்த்துக் கேட்டேன்:
"ஒரு வரம் கேட்கச்சொல்லி பல வரங்கள் தருபவரே!
மெல்லிசையை ரசித்துணரும் குணம் வேண்டும் என்றேனே! - அந்த
ஒன்றைத் தந்தால் இத்தனை வரங்கள் வேண்டாமே!" என்று!

தோல்வியெனத் தோன்றியதோ என்னவோ, "வேறேதும் வேண்டுமா?" என்றார்!
"சற்றே சிந்திப்பீர்! பண்ணால்யாம் பெருமின்பமெலாம் உம்மால் தரத்தகுமோ?
தோழனாய்த் தோள்தர நல்லிசை விருப்பம் ஒன்றிருந்தால் அவ்விசையின்
சந்தத்துக்குச் சொல்போல் இவையெலாம் தாமே பின்வருமே!" என்றேன்!

சொல்லி முடித்துத் திரும்பிப் பார்த்த நான் அதிர்ந்தேன்!
சொல்லாமல் கொள்ளாமல் கடவுள் காணாமல் போயிருந்தார்!

Wednesday, July 31, 2013

வாழ்த்து

வாழ்த்தென்றால் என்னவென்று வினவினான் நண்பன் - 
வாழ்கவெனும் சொல்லெல்லாம் வாழ்த்தோ என்றவாறே!
வாழ்த்தத்தயங்கா நானோ புன்னகைத்தபடி மறுத்தேன் - 
வாழ்த்தில் சிக்கலென்ன என்றுஅவன் மனம்வியக்கவே!

​அவர்பால் தன்னகத்தில் தோன்றும் உண்மையன்பைச்  
செல்வமாய் அவருணர உரைப்பதே வாழ்த்தென்றேன்!
அன்பில்லா ஒருவரின் பொய்நகையுடன் வெளிப்படும் 
செல்லாத சொல்லெல்லாம் வாழ்த்தல்லவே யென்றேன்!

Sunday, June 30, 2013

பாடும் பாட்டும்!

பாடுபட்டு உழைத்தும் பாடுபடுத்தா குணத்தைப் 
பழகத்தான் இயலவில்லை - பாடுபடுத்தும் மனத்தால்! 
பாட்டைப் பழகியபின்னோ மனப்பாடு பறந்தது; 
பழகிய இசையாலே பாடுபடுத்தல் மறந்தது! 

Friday, May 31, 2013

உரைப்பதெலாம் உளறலே!

முன்னைப்போல் இசைத்திடென்று மன்றாடிக் கேட்டிடுவார்; 
முன்னைப்போல் இசைத்தாலோ முந்தையது தானேவென்பார்! 
உன்னைப்போல் இசைதந்தால் வேறுவிதம் வேண்டிடுவார்; 
உன்னைப்போல் இசைக்காவிடில் எவ்விதம் ஏற்கவென்பார்! 

விண்ணைப்போல் விரிந்து வளியைப்போல் நிறைந்து 
மண்ணைப்போல் தாங்கி மகாநதியைப்போல் பரந்து 
பண்ணால்தம் மனத்துயர் தீய்த்திடும் உன்பேரறிவை 
எண்ணும் வழியற்றோர் உரைப்பதெலாம் உளறலே!

Wednesday, April 10, 2013

படைப்பாளனின் பேரிலக்கணம்


கெட்டவர்களின் கெட்டவற்றை நயவஞ்சகமெனச் சித்தரித்து  
கெட்டவர்களின் நல்லவற்றை நாயகர்பண்பெனப் போற்றாமல் -
நல்லவர்களின் கெட்டவற்றை வாழ்வியல்பென உணரவைத்து
நல்லவர்களின் நல்லவற்றை மாமனிதமென எடுத்துரைத்தலே -
கெட்டதை வளர்க்கவிரும்பாத கேடிழைக்க விழையாத
நல்லதொரு திரைப்படப் படைப்பாளனின் பேரிலக்கணம்!

Sunday, March 31, 2013

கடவுளே, நீ யார்?

தொழுபவர்க்கு நன்மைநல்கித் தன்னைவணங்காரைக் கைவிட்டுத்
தோன்றியபடி விதிசமைத்துத் தலையெழுத்தென உரைக்கவிட்டுத்
தெய்வமெனப் பேர்பெற்றிடக் கடவுளெனவுனக்குப் பெயரெதற்கு?
தேவையெலாம் அரசியலாற்றலென்று பொல்லாததற்கும் துணிந்து
அடிவருடுபவர்க்கு அள்ளித்தந்து எதிர்ப்போரை அழித்தொழித்து 
ஆட்சியினை ஆட்டிவைக்கும் சர்வாதிகாரக் கொடுங்கோலனே
இறைவனென இயற்றப்பட்டிருப்பதை அறிந்திருந்தால் உணர்ந்திருப்போம்:
ஈரமனமும் ஈகைக்குணமுமே கோவெனப்போற்றுதலுக்கு உகந்ததென்று!

Wednesday, February 27, 2013

திங்கள்

திங்களுக்கோர் எண்ணப்பதிவை எழுதநினைத்துத் தொடங்கினேன்
திங்களன்று உவகையுடன் பள்ளிசெல்லும் மாணவனைப்போல்!
திங்களாய் மனவானின் ஓரத்தில் வளர்ந்துதேய்ந்தேயிருந்தாலும்
திங்களிறுதியில்தான் முழுநிலவுநாளோ என் கவிநிலவுக்கு?

Thursday, January 31, 2013

கறுத்ததோ என் கருத்து?

கருத்தினைப் பதித்திடப் பேருரிமையெனக்கு உண்டென்று
கருத்தினில் உதித்தகருவினை வளர்த்தேன் - குழந்தையாய்!
கருத்து கறுத்ததென்று கருத்துரைத்தனர் பலகருத்துடையோர் -
கருத்தால் நான்கருதியது கறுந்திணையன்று என்றுரைத்தும்
கறுத்ததென் உள்ளமென்று உலகெங்கும் எடுத்துரைத்தார்!
கறுத்தபணம் கண்டிராத என்வெற்றுப் பொருளகத்தால்தளரா
கறுத்தமனம் கொண்டிராத என்நலம் விரும்பிக்கூட்டமும்
கறுத்துத் தான்போனது - நீதியாலு(ளு)ம் ஆட்சியாலும்!

கருத்தாய்க் கறுத்ததை என்றோ வேறெங்கோ - நான்
கறுக்கியதால் தானோ இன்றெனக்குக் கருவறுத்தல்?