Showing posts with label நண்பன். Show all posts
Showing posts with label நண்பன். Show all posts

Sunday, August 04, 2024

நண்பன் கண்ணதாசனுக்குப் பிறந்தநாள் வாழ்த்து!

மருத்துவம் நம்மைச் சந்திக்க வைத்தாலும் 
இசையே நம்மை இணைத்து வைத்தது! 
உன்னைப்போலத் தான் நானென்று நீயும் 
என்னைப்போலத் தான் நீயென்று நானும் 
உணர்ந்த அத்தருணத்தில் தொடங்கிய நட்பால் 
எவ்வளவு இசையை பருகியிருப்போம் ஒன்றாக!
எத்தனை மேடைகளில் இசைத்திருப்போம் நன்றாக!
இசைஞானியின் பெருமையினை இணைந்து நாம்உணர 
இசைந்த நம்மனங்கள் வளர்த்த அன்பினால் 
உன்வாழ்வில் நானும் என்வாழ்வில் நீயும் 
இரண்டரக் கலந்திடவே ஒன்றானது நம்வாழ்வு! 
உன்னைநான் வாழ்த்துவதும் என்னைநீ வாழ்த்துவதும் 
வார்த்தைகளாலா? அல்ல! ஒன்றான மனத்தால்!

"ஹே ராஜா! ஒன்றானோம் இன்று! 
இனி நாம் தானே ரெண்டல்ல ஒன்று!"

என்று நமக்குப் பொருத்தமாகப் 
பாடல்தந்து 
நட்பே வாழ்த்திய பெருமையுடன் சொல்வேன்:

Happy Birthday, Partner! Wishing you many more happy returns of the day!

Sunday, March 30, 2014

அன்பின் நட்பும் நட்பின் அன்பும்

நட்பு எனக்கு அன்பு செய்ததால் அன்புக்கு நட்பானேன்;
அன்புடன் பழகப் பழகவே பல்கிப் பெருகியது நட்பு!
அன்பின் நண்பனென்றும் நட்பின் அன்பனென்றும்
நட்பும் அன்பும் எனைக்காத்துக் கொண்டாட,
வியந்து நின்றது வினை - என்னை 
வீழ்த்தும் வழி எதுவென்று அறியாது!

துன்பமெனும் அம்பை இறுமாப்புடன் எய்தது வினை; 
ஆறுதலால் உயிர்த்தெழச் செய்தது நட்பின் அன்பு!
துரோகம் கொண்டு நிலைகுலைக்க எண்ணியது வினை;
ஆதரவாய்க் கயமையை வென்றது அன்பின் நட்பு!
தாக்கவோர் ஆயுதமின்றித் திகைத்த வினை
தயங்கியே ஏற்றது தான் தோற்றதை!

Monday, September 30, 2013

மதி

மதியென்று ஒன்றுளதே; அது யாதென்று
புதிதாய் வினவினேன் நண்பனிடம் இவ்வாறு:
"விண்ணின் மதியா? பெறும் வெகுமதியா?
பொன்னின் மதியா? தரும் பெருமதியா?"

தான்காணத் தன்விழி இருக்கப் பிறர்கருத்தையே
கண்ணாய்க் கொண்டு பார்வை வளர்ப்போரிடம்
இல்லாதது எதுவென்று சொல்லென்று கூறியவன்
ஈடிலாப் பொருள் தந்தான் என்மதிக்கு!

Wednesday, July 31, 2013

வாழ்த்து

வாழ்த்தென்றால் என்னவென்று வினவினான் நண்பன் - 
வாழ்கவெனும் சொல்லெல்லாம் வாழ்த்தோ என்றவாறே!
வாழ்த்தத்தயங்கா நானோ புன்னகைத்தபடி மறுத்தேன் - 
வாழ்த்தில் சிக்கலென்ன என்றுஅவன் மனம்வியக்கவே!

​அவர்பால் தன்னகத்தில் தோன்றும் உண்மையன்பைச்  
செல்வமாய் அவருணர உரைப்பதே வாழ்த்தென்றேன்!
அன்பில்லா ஒருவரின் பொய்நகையுடன் வெளிப்படும் 
செல்லாத சொல்லெல்லாம் வாழ்த்தல்லவே யென்றேன்!