Saturday, January 09, 2016

போதைக்கு அடிமை நான்!

பன்னாட்டு மாநாடு எந்நாட்டில் நிகழ்ந்திடினும் 
தோழமையென வழங்கும் மதிநிறை மாலையிலே 
இம்மதுவோ அம்மதுவோ எம்மது தந்திடவென 
வினவிடும் அன்பரிடம் - மதுவேதும் பழகாதவன் 
நானென்றுரைக்க அவர் புருவங்கள் மேலெழும்பும் 
செயலெனக்குத்தரும் போதைக்கு அடிமை நான்!

Friday, January 02, 2015

தான்

தானாய் வரும் நன்மைதனைக் கடந்துத் 
தன்னால் நிகழும் நன்மை யாதென நினைந்துத் 
தானாய் வரும் தீமைதனைத் தவிர்த்துத் 
தன்னால் தீமை நிகழாதென மாந்தர்குலம் சூளுரைக்கத் 
தானாய்த் தோன்றிய இப்பாடலால் வேண்டினேன்
தன்னால் பூத்த அழகுப் புத்தாண்டு மலரை!

Sunday, March 30, 2014

அன்பின் நட்பும் நட்பின் அன்பும்

நட்பு எனக்கு அன்பு செய்ததால் அன்புக்கு நட்பானேன்;
அன்புடன் பழகப் பழகவே பல்கிப் பெருகியது நட்பு!
அன்பின் நண்பனென்றும் நட்பின் அன்பனென்றும்
நட்பும் அன்பும் எனைக்காத்துக் கொண்டாட,
வியந்து நின்றது வினை - என்னை 
வீழ்த்தும் வழி எதுவென்று அறியாது!

துன்பமெனும் அம்பை இறுமாப்புடன் எய்தது வினை; 
ஆறுதலால் உயிர்த்தெழச் செய்தது நட்பின் அன்பு!
துரோகம் கொண்டு நிலைகுலைக்க எண்ணியது வினை;
ஆதரவாய்க் கயமையை வென்றது அன்பின் நட்பு!
தாக்கவோர் ஆயுதமின்றித் திகைத்த வினை
தயங்கியே ஏற்றது தான் தோற்றதை!

Friday, February 28, 2014

திரையும் திறையும்

பனித்திரை சூழும் பண்புடை நாட்டுக்குப் 
பணித்திறை விலகாப் பற்றுடன் சென்றிட 
மனத்திரை திறந்து மகிழ்வோர் வாழ்த்தும்  
மணத்திறை போதுமே மதியுளோர் வெல்ல!

Friday, January 31, 2014

திறனாய்வு

தன்னை உணராது தன்திறன் அறியாது 
தன்னைத் தானே தாழ்த்தி உயர்த்தும் 
தன்மையால் நன்மை நேராதென்று உணரும் 
தன்மையே தாழ்வற்ற உயர்வான திறன்!

Saturday, January 11, 2014

இறந்தும் இரப்பவள் யார்?

இரக்க குணம்தனை இருக்கையில் 
இறக்கச் செய்து வாழ்பவர்கள் இருக்க, 
இறந்தும் தன் மக்களுக்கு 
இரந்து வாழ வைப்பவள் தாய்!


- கைபேசி கொண்டு தமிழில் நான் எழுதும் முதல் பதிவு!

Saturday, December 28, 2013

நன்றியுள்ள நாய்க்குட்டி

இன்னா எண்ணுதலை இழிந்ததென்று உணர்த்தாது 
இந்நாளில் இவையெலாம் இயல்பென உரைக்கும் 
என் கயமையைக் கேட்டுப்பழகியபடியே வளர்ந்திடும் 
என் மனசாட்சியும் நன்றியுள்ளதோர் நாய்க்குட்டியே!